brand logo
BestWeb.LK 2024 logo
இறம்புக்கனை இரட்டைக் கொலை- சடலங்கள் கண்டுபிடிப்பு (VIDEO)

இறம்புக்கனை இரட்டைக் கொலை- சடலங்கள் கண்டுபிடிப்பு (VIDEO)

13 January 2023 | - 𝐒𝐚𝐬𝐢𝐝𝐚𝐫𝐚𝐧

இறம்புக்கனை-ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான வீடொன்றின் பின்னால், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இரு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேக வெளியிட்டனர்.


நவம்பர் 19 மற்றும் 28 ஆம் திகதிகளில் மாவனெல்ல கிரிங்கதெனிய மற்றும் கெரமினிய வத்த பகுதியைச் சேர்ந்த மொஹமட் இக்பால் மொஹமட் அசார் மற்றும் மொஹமட் அன்வர் மொஹமட் அர்ஷாத் ஆகிய இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக மாவனெல்ல பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.


இதன்படி, கேகாலை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​றம்புக்கனை, ஹுரிமலுவ பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டுக்குப் பின்னால் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


பின்னர் இது தொடர்பில் கேகாலை நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முறைப்பாடு செய்தனர்.


பின்னர் நேற்று கேகாலை நீதவான் வாசனா நவரத்னவின் மேற்பார்வையில் கேகாலை பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியர்கள் முன்னிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.


அதன்படி நேற்று (12) மாலை 5.30 மணியளவில் குறித்த வீட்டின் கொங்றீட் பலகைக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த சடலமொன்றை பொலிஸார் முதலில் கண்டெடுத்துள்ளனர்.


காணாமல் போன மற்றைய இளைஞரின் சடலத்தைக் கண்டறிவதற்கான அகழ்வுப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அதன்படி இன்று பிற்பகல் மற்றைய சடலமும் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




You may also like